தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வரும் தூய்மைக் காவலர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அவர்களின் மாதாந்திர மதிப்பூதியத்தை உயர்த்தி தமிழக அரசு இன்று (பிப். 4) அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இதுவரை வழங்கப்பட்டு வந்த ரூ.5,000 மதிப்பூதியம், தற்போது ரூ.6,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வுக்காக மாநில அரசு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.417.47 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. கிராமப்புறங்களில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் தூய்மைப் பணிகளில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வரும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்குப் பயன் அளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு தங்களது ஊதியத்தை உயர்த்த வேண்டும் எனத் தூய்மைக் காவலர்கள் விடுத்த கோரிக்கைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தற்போது தீர்வு கண்டுள்ளது.

