வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாத உதவித்தொகை / Monthly stipend for unemployed youth
தமிழக அரசு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாத உதவித்தொகை வழங்குகிறது. 9 ஆம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை பல்வேறு கல்வித் தகுதிகளுக்கு ரூ.200 முதல் ரூ.600 வரை உதவித்தொகை வழங்கப்படும்.
தமிழக அரசு படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கிடும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தனியார் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு முகாம் நடத்தி வருகிறது. அரசு பணிக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் மூலம் பணியாளர்களை தேர்வு செய்கிறது.
அதே நேரத்தில் எந்த வித வேலையும் கிடைக்காதவர்களுக்கு உதவிடும் வகையில் அரசு மாதந்திர உதவித்தொகை வழங்கி வருகிறது. இந்த நிலையில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் வாயிலாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. எஸ்.எஸ்.எல்.சி தோல்வி/ எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி / எச்.எஸ்.சி / பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு போன்ற கல்வித் தகுதிகளை படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் வேலைவாய்ப்பின்றி காத்திருப்பவர்கள் உதவித்தொகை பெற சென்னை-32. கிண்டியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அனுகலாம்.
இந்த உதவித்தொகையினைப் பெற விண்ணப்பிக்கும் மனுதாரர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்து வருபவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் 40 வயதுக்குட்பட்டவராகவும். ஆதிதிராவிடர் /பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள் தனியார் நிறுவனங்களில் பணிபுரியாதவராகவும்,
சுய வேலைவாய்ப்பில் ஈடுபடாமல் இருப்பவராகவும் இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/- க்கு மிகாமல் இருப்பவராக இருத்தல் வேண்டும். மேற்கண்ட தகுதிகள் இருப்பவர்கள் மட்டுமே வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தகுதிவுடையவர் ஆவர்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் உரிய விண்ணப்ப படிவத்தினை சென்னை-32, கிண்டி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பெற்று விண்ணப்பிக்கலாம்.
மேலும், மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் சென்னை-32. கிண்டியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஏற்கனவே உதவித் தொகை பெற்று வரும் பயனாளிகளில் விண்ணப்பம் சமர்ப்பித்து ஓராண்டு முடிவு பெற்றவர்கள் சுய உறுதி மொழி ஆவணத்தை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண், உதவித்தொகை எண் (MR. No.) வங்கி புத்தகம் நகல் மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஐகடே தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் 9-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று பள்ளி இறுதி வகுப்பு தவறியவர்கள், 10-ம் வகுப்பு தோல்வி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.200,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400, பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600 வழங்கப்படவுள்ளது. எனவே பட்டதாரிகளுக்கு மாதம் 600 வீதம் 7200 ரூபாய் உதவித்தொகையானது தமிழக அரசு வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.