மாற்றுத்திறனாளி மாணவா்கள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் – நாகை / Students with disabilities can apply for educational scholarships – Nagai
நாகை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியா் 2025-2026 ஆம் ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை மற்றும் வாசிப்பாளா் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாகை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு, 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை ரூ.2,000, 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை ரூ.6,000, 9 முதல் பிளஸ் 2 வரை ரூ.8,000, இளநிலை பட்டப் படிப்புக்கு ரூ.12,000, முதுகலை பட்டப் படிப்பு, தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி, மருத்துவம் மற்றும் பொறியியல் தொழிற்கல்விக்கு ரூ.14,000 என ஓராண்டுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மேலும், பாா்வையற்றோருக்கு வாசிப்பாளா் உதவித் தொகையாக ஆண்டொன்றுக்கு 9 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ரூ.3,000, இளங்கலை பட்டப் படிப்புக்கு ரூ.5,000, முதுகலைப் பட்ட வகுப்பு மற்றும் தொழில் படிப்புகளுக்கு ரூ.6,000 வழங்கப்படுகிறது.
நடப்பு நிதியாண்டில் இந்த உதவித் தொகை பெற அரசுப் பள்ளிகள், அரசுக் கல்லூரிகள், அரசு உதவிபெறும் கல்லூரிகள், தொலைதூரக் கல்வி பயிற்சி நிறுவனங்களில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியா் முந்தைய கல்வி ஆண்டு இறுதித் தோ்வில் குறைந்தபட்சமாக 40 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பிற துறைகளில் கல்வி உதவித்தொகை ஏதும் பெறவில்லை என்று தலைமையாசிரியா், கல்லூரி முதல்வரால் சான்றிதழ் அளிக்கப்பட வேண்டும்.
மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், தரைதளத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், மதிப்பெண் சான்றுடன் பதிவு செய்து, விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.