வரலக்ஷ்மி விரதம் 2025: இந்த ஆண்டு வரலட்சுமி நோன்பு, விரதம் எப்போது வருகிறது? / Varalakshmi Vratham 2025: When is Varalakshmi Vratham and Vratham this year?
இந்தியாவில் பெண்கள் கொண்டாடும், அனுஷ்டிக்கும் பல பண்டிகைகளும் விசேஷங்களும் உள்ளன. இதில் மிக மிக முக்கியமானது, வரலக்ஷ்மி விரதம்.
வளர்பிறை நாளில் வரலட்சுமி நோன்பு எப்போதுமே கொண்டாடப்படுவதால் ஆவணி மாத துவக்கத்திலேயே பௌர்ணமி வந்துவிடுவதாலும் ஆடி மாதத்திலேயே 2025 ஆம் ஆண்டு வரலட்சுமி நோன்பு கொண்டாடப்படுகிறது.
வரலட்சுமி விரதத்தின் மகிமை
வரலட்சுமி என்றாலே வரங்களை வாரி வழங்கும் லட்சுமி தேவி என்று பொருள். இந்த விரதத்தை கடைப்பிடிப்பதன் மூலம், நோன்பு இருந்து, வழிபடுவதன் மூலம், அஷ்டலட்சுமியின் (செல்வம், தானியம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், குழந்தைகள், வெற்றி, புகழ்) ஆசிகளை முழுமையாகப் பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது. திருமணமான பெண்கள் தங்கள் குடும்பத்தின் நல்வாழ்வு, கணவரின் ஆரோக்கியம், நீண்ட ஆயுள் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக வரலட்சுமி விரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.இந்த விரதத்தை மேற்கொள்வது வாழ்வில் எல்லா விதமான செல்வத்தையும், பாக்கியங்களையும், செழிப்பான மகிழ்ச்சியான வாழ்க்கையை அருளும் என்பது ஐதீகம். செல்வத்துக்கு அதிபதியான மகாலக்ஷ்மியின் அருளைப் பெற்றுத் தரும் வரலட்சுமி விரதம் 2025 ஆம் ஆண்டு எப்போது வருகிறது, பூஜை முகூர்த்த நேரம் மற்றும் முக்கியத்துவம் பற்றி பார்க்கலாம்.
ஆவணி மாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமை
மகாலட்சுமிக்கு உரித்தான வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும், திதிகளின் அடிப்படையில் வளர்பிறையில் என்று வரலட்சுமி நோன்பு கொண்டாடப்படும் என்பதால் ஒவ்வொரு ஆண்டும் வரலட்சுமி விரதத்தின் தேதியில் பெரிய மாறுபாடுகள் உண்டாகும். வரலட்சுமி விரதம் பொதுவாக ஆவணி மாதம் வரும் முதல் வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்படும். பௌர்ணமிக்கு பிறகு வரும் வெள்ளிக்கிழமைகள் தேய்பிறை வெள்ளி என்பதால், பௌர்ணமிக்கு முந்தைய வளர்பிறை வெள்ளி என்று வருகிறதோ, அந்த நாளில் வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்படும்.
2025 வரலட்சுமி விரதம் தேதி
பஞ்சாங்கத்தின் படி, இந்த ஆண்டு, 2025 வரலட்சுமி விரதம், ஆடி மாதத்திலேயே வருகிறது. ஆவணி மாதத்தின் முதல் நாளே தேய்பிறை பிரதமை என்பதால், ஆவணி பௌர்ணமிக்கு முந்தைய வளர்பிறை வெள்ளிக்கிழமை என்ற கணக்கில், ஆடி மாதம், ஆகஸ்ட் 8 அன்று வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. ஆடி 23, ஆடி மாதப் பௌர்ணமி அன்று திருவோண நட்சத்திரத்தில் வரலட்சுமி விரதம் வருகிறது.
வரலட்சுமி விரதம் இருப்பதால் கிடைக்கும் பலன்கள்
வரலட்சுமி நோன்பின் தனித்துவமே மகாலட்சுமிக்கு கலசம் வைத்து பூஜை செய்வதாகும். வரலட்சுமி நோன்பு நாளில் விரதம் இருப்பதால் எண்ணற்ற பலன்கள் கிடைக்கும். இதில் முக்கியமாக மகாலட்சுமியின் அருளால் குடும்பத்தில் இருந்த வறுமை, நெருக்கடிகள் நீங்கி செல்வம் சேரும். கணவன் மனைவி குழந்தைகள் மகிழ்ச்சியாக சிறப்பாக வாழ்வார்கள். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் நீங்கி இணக்கம் அதிகரிக்கும். திருமணத்தடை நீங்கும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை செல்வம் கிடைக்கும் என்பதும் ஐதீகம்.
வரலட்சுமி விரதம் வெள்ளிக்கிழமை அன்று வருவதால் முதல் நாளை வீட்டை சுத்தம் செய்து பூஜை அறையை அலங்கரித்து வைக்க வேண்டும். வரலட்சுமி பூஜை செய்யும் பொழுது, லலிதா சகஸ்ரநாமம், லக்ஷ்மி சகஸ்ரநாமம், கனகதாரா ஸ்தோத்திரம், அபிராமி அந்தாதி உள்ளிட்டவை பாராயணம் செய்வது மிகவும் சிறப்பாகும்.